ஆவினின் 7 புதிய உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை

சென்னை: ஆவின் துறையில் புதிய 7 உத்தரவுகளை பிறப்பித்து, அதனை பின்பற்றுமாறு பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
* தொடக்க கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உறுப்பினர் கல்வி கற்றல், கறவை மாடு வாங்க கடன் பெற உதவுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* செயல்படாமல் உள்ள சங்கங்களுக்கு புத்துயிர் ஊட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) தங்களது மாவட்டத்தில் பால் உற்பத்தியாக வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து புதிய பால் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி பால் வரத்தினை அதிகப்படுத்த வேண்டும்.
* சங்கங்களிலிருந்து பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாலுக்கான தொகையினை கால தாமதமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய நேரத்தில் பட்டுவாடா செய்ய வேண்டும்.
* அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களுக்கு பயன்படும் கால்நடை பராமரிப்பு விவரங்கள், நோய் பாதுகாப்பு விவரங்கள் மற்றும் திட்டங்களை சுவரொட்டிகள் மூலம் காட்சிப்படுத்த வேண்டும்.
* உறுப்பினர்களுக்கு தேவையான கால்நடை தீவனம், மினரல் மிக்ஸர் தீவன விதை இருப்பு வைத்து வழங்க வேண்டும்.
* பால் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ள இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

The post ஆவினின் 7 புதிய உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: