கோடை விழா இன்றுடன் நிறைவு

 

ஊட்டி, மே 31:ஊட்டியில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்த கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது. ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகின்றனர். இவர்களை வரவேற்கும் வகையிலும், மகிழ்விக்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இம்முறை கடந்த 6ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. தொடர்ந்து அன்றைய தினம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் புகைப்பட கண்காட்சி துவங்கியது.

12ம் தேதி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. 13ம் தேதி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி துவங்கி இரு நாட்கள் நடந்தது. முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடந்தது. இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேலும், கடந்த 7ம் தேதி முதல் பழங்குடியினர் கலாசார மையத்திலும், தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடந்து வந்தது.

இம்மாதம் 19ம் தேதி ஊட்டி ஏரியில் படகு போட்டிகள் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்டது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 27ம் தேதி துவங்கி இரு நாட்கள் பழக்கண்காட்சி நடந்தது. கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், புகைப்பட கண்காட்சியும் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கோடை விழாவின் நிறைவு விழா இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத்துறை மூலம் பரிசுகள் வழங்கப்படுகிறது.

The post கோடை விழா இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: