முதல் சுற்றில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை துருக்கியில் 2ம் சுற்று அதிபர் தேர்தல்

அங்காரா: துருக்கியில் 2ம் சுற்று அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. துருக்கியில் கடந்த 2003 ம் ஆண்டு முதல் தயீப் எர்டோகன் (69) ஆட்சியில் இருந்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014 ம் ஆண்டு அப்பதவியை கலைத்து உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். இந்தச் சூழலில் கடந்த 14ம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், எதிர்க்கட்சி வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும் பெற்றனர். துருக்கியின் அரசியல் வழக்கப்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார்.

கடந்த பிப்ரவரியில் துருக்கி – சிரிய எல்லையில் பயங்கர பூகம்பத்தால் 50,000க்கும் அதிகமானோர் பலியாகினர். பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்று அதிபர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் எர்டோகன் வெற்றிபெற்றால் வரும் 2028ம் ஆண்டு வரை அவர் பதவியில் நீடிப்பார். எர்டோகன் கூறும்போது, “ இந்த வாக்குகள் தேசம் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதைக் காண்பிக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவேன்” என்றார்.

The post முதல் சுற்றில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை துருக்கியில் 2ம் சுற்று அதிபர் தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: