டம்ளர் முடக்கு பகுதியில் உள்ள குளத்தை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி, மே 27: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டம்ளர் முடக்கு பகுதியில் உள்ள குளத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டம்ளர் முடக்கு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் குறைந்தளவே காணப்பட்டன. அங்கு ஒரு பெரிய குளம் மட்டுமே இருந்துள்ளது. அதில் தேங்கும் ஊற்று நீர் சுற்றுவட்டாரா பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளது. இந்நிலையில், மக்கள் பெருக்கம் அதிகரிக்கவே இந்த குளம் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியது. தற்போது இங்கு ஏராளமான குடியிருப்புகள் வந்துவிட்டன. இதனால் இந்த குளம் கழிவு நீர் தேங்கி நிற்கும் பகுதியாக மாறிவிட்டது.

தற்போது இந்த குளத்தின் நீரை யாரும் பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இருந்த போதிலும், எந்நேரமும் இந்த குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த குளத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யாமல் நகராட்சி நிர்வாகம் பாதுகாப்பது அவசியம். கழிவு நீரை அகற்றி, தூர் வாரினால் குளம் தூய்மையாகும். அதன்பின், இந்த நீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post டம்ளர் முடக்கு பகுதியில் உள்ள குளத்தை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: