செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக விரோத குற்றவாளிகளான கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம், போலி மதுபானம், லாட்டரி போன்ற குற்ற செயலில் ஈடுபடுவோர், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், மற்றும் ரவுடிகள் இவர்களின் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படா வண்ணம் தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 53 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையும் (என்எச்-32, ஜிஎஸ்டி) 67 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரை சாலையும் உள்ளது. இதில், சாலை விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு சீரான போக்குவரத்து வசதி ஏற்பட முழுக்கவனம் செலுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகளவில் பிரபலமான சுற்றுலா தலமான மாமல்லபுரமும், உலகின் பல பகுதிகளிலிருந்து பறவைகள் வந்து செல்லும் சுற்றுலா தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் உள்ளது. இச்சுற்றுலா தலங்களில் விடுமுறை நாட்களிலும், பல்வேறு விஷேச நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் பல லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகைதந்து பார்வையிட்டு செல்வது வழக்கம்.
எனவே, பாரம்பரியமான இச்சுற்றுலா தலங்களுக்கு வருகைபுரியும் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியமான சூழ்நிலையும் ஏற்படாவண்ணம் அவர்களது பாதுகாப்பில் முழுக்கவனம் செலுத்தப்படும்.
மேலும், செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையின் எல்லைக்குட்பட்ட இடங்களில் நடக்கும் சட்ட விரோத மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை போன்ற சட்ட விரோத செயல்களை பற்றி தொலைபேசி வாயிலாகவும், வாட்சப்-ஆப் வாயிலாகவும் மற்றும் குறுந்தகவல் மூலமாகவும் 72001 02104 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொண்டு புகார் செய்யலாம். அவ்வாறு தாங்கள் தெரிவிக்கும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post செங்கல்பட்டு மாவட்டத்துக்கு புதிய எஸ்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.