29ல் வருங்கால வைப்பு நிதி திட்ட முகாம்

 

ஊட்டி, மே 20: வருங்கால வைப்பு நிதி தொடர்பான நிதி ஆப்கே நிகட் அவுட் ரீச் திட்ட முகாம் ஊட்டி பிரீக்ஸ் பள்ளி வளாகத்தில் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து இபிஎப் மாவட்ட நோடல் அலுவலர் தனுஷ் கூறியிருப்பதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பானது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் நிதி ஆப்கே நிகட் 2.0 மாவட்ட அவுட்ரீச் திட்டம் என்ற திட்டத்தை நடத்த முன்வந்துள்ளது. இது ஒரு உள்ளடக்கிய ஒத்திசைவான மற்றும் விரிவான பொறிமுறையாக இருக்கும். இது ஒருகுறை தீர்க்கும் தளமாகவும், பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான தகவல் பரிமாற்ற வலையமைப்பாகவும் செயல்படும்.

நீலகிரி மாவட்டத்திற்கான நிதி ஆப்கேநிகட் 2.0 அவுட் ரீச் திட்ட முகாம் வரும் 29ம் தேதி ஊட்டி பிரீக்ஸ் நினைவு மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும். இந்த அவுட்ரீச் திட்டத்தின் ஒரு பகுதியாக இபிஎப்., மற்றும் எம்பி சட்டம் 1952 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்கள், பணியாளர்கள் மற்றும் முதலாளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்தாரர்களுக்கு கிடைக்கும் ஆன்லைன் சேவைகள் குறித்து விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்படும்.

இபிஎப்ஒ.ன் புதிய முன்முயற்சிகள், சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பரப்புவதற்கு கூடுதலாக பணியாளர்கள் இபிஎப்., அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்று முதலாளிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை கவனித்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவார்கள். இதில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், ஊழியர்கள், முதலாளிகள் do.ooty@epfindia.gov.in அல்லது ro.coimbatore@epfindia.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு 26ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புவோர் தங்களது யுஏஎன்., எண், பிஎப்., கணக்கு எண், பிபிஒ., எண் தவறாமல் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post 29ல் வருங்கால வைப்பு நிதி திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: