நிலத்தை எழுதி தரக்கோரி உரிமையாளரை மிரட்டிய பாஜ நிர்வாகி வீட்டில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்: தஞ்சாவூர் அருகே பரபரப்பு

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் அருகே நிலத்தை எழுதி தரக்கோரி உரிமையாளரை மிரட்டிய பாஜ நிர்வாகி வீட்டில் பங்கர ஆயுதங்கள், வெடிபொருட்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). பாஜ ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ள இவர் மீது, 2016ல் மருதாநல்லூர் மதன் சக்கரவர்த்தி கொலை, 2017ல் தாராசுரம் சிவானந்தம் கொலை, 2022ல் 2கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் நாச்சியார் கோவில் மற்றும் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் ரவுடி பெயர் பட்டியலில் உள்ளார். கருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம், கார்த்திகேயன் வீட்டிற்கு பின்புறம் உள்ளது. இதில் 10ஆயிரம் சதுர அடி நிலத்தை தனக்கு இலவசமாக எழுதிதர வேண்டும் என சிவக்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிவக்குமார், கடந்த 26ம்தேதி நாச்சியார் கோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர்சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் 15க்கும் மேற்பட்ட போலீசார் கார்த்திகேயன் வீட்டுக்கு நேற்று சென்றனர். போலீஸ் வருவதை கண்டு கார்த்திகேயன் தப்பியோடிவிட்டார். அவரது குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியதில், வெடிபொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், வீடியோ கேமராவின் பதிவுகளை பார்க்க பயன்படும் டி.வி.ஆர் கன்ட்ரோல் யூனிட் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மிரட்டல் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நிலத்தை எழுதி தரக்கோரி உரிமையாளரை மிரட்டிய பாஜ நிர்வாகி வீட்டில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்: தஞ்சாவூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: