ஆவுடையார்கோவில் அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 20 பவுன் செயின் திருடிய 3 பேர் கைது

புதுக்கோட்டை, ஏப்.21: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே வீடு புகுந்து தூங்கிய பெண்ணிடம் 20 பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்ற டிரவுசர் அணிந்த 3 திருடர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகேயுள்ள கிடங்கிவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், இவரது மனைவி மஞ்சுளாதேவி, தாய் பாப்பம்மாள் ஆகிய மூன்று பேரும் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் மூன்று பேர், அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.

மஞ்சுளாதேவியின் கழுத்தில் கிடந்த சுமார் 20 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அவர்களை ஆறுமுகம் பிடிக்க முயன்றபோது மூவரும் தப்பியோடினர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் (பொ) சாந்தகுமாரி தலைமையில் போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகுடி காவல் சரகம் சிறுமருதூர் கண்மாயில் ஒளிந்திருந்த மூன்று பேரை டிரோன் கேமரா மூலம் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் சிவகங்கை மாவட்டம் காந்திவீதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரபாகரன் (25), தஞ்சாவூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ரவி மகன் பிரபாகரன் (30), ராமசாமி மகன் ரமேஷ் (38) ஆகிய மூவரும் நகைத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஆவுடையார்கோவில் அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 20 பவுன் செயின் திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: