தமிழ்நாட்டில் ‘1962’ எண் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3.25 லட்சம் கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை

மதுரை: தமிழ்நாட்டில் ‘1962’ எண் ஆம்புலன்ஸ் சேவை வசதி மூலம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 106 கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ‘1962’ எண் இலவச கால்நடை அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை வசதி கடந்த 2016ம் ஆண்டு முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் துவங்கப்பட்டு, பிறகு 2019ல் 32 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. விவசாயிகள், கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளை காக்கும் விதமாக ‘1962’ ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. கன்று ஈனுவதில் பிரச்னை, நோய் குறைபாடு, எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புக்கு ‘1962’ கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு கால்நடை உரிமையாளர் அழைப்பு விடுத்தவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு தேடி விரைந்து வந்து கால்நடைகளுக்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் குழுவில் பைலட் மற்றும் ஒரு மருத்துவ நிபுணர், மருத்துவ உதவியாளர் இடம்பெறுவர். கால்நடை பராமரிப்பு துறையின் கட்டுப்பாட்டில் 24 மணி நேரம் செயல்படும் ‘1962’ ஆம்புலன்சில் ரத்த மாதிரி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் என பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன.

இதனால் சிக்கலான நிலையில் உள்ள கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் உரிய நேரத்தில் விரைவாக முழுமையாக அளிக்கப்படுகிறது. பசுமாடு, எருமை, காளை, கோழி, ஆடு, குதிரை, பன்றி போன்ற கால்நடைகளுக்கு கன்று ஈனுதல் பிரச்னை, வயிற்றுப்போக்கு, விஷக்கடி உள்ளிட்ட அவசர கால மருத்துவ தேவைக்கு ‘1962’ ஆம்புலன்ஸ் சேவை தனி சிறப்பிடம் பிடித்துள்ளது. ‘1962’ இலவச கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்த 2019 நவம்பர் முதல் 2023 மார்ச் வரை கால்நடைகளுக்கு மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கன்று ஈனுதல் உள்ளிட்ட மருத்துவ தேவைகள் மாவட்ட வாரியாக அளிக்கப்பட்ட விவரம் வருமாறு: தேனி மாவட்டம் – 15,380, பெரம்பலூர்- 15,169, புதுக்கோட்டை- 13,992, திண்டுக்கல்- 13,718, விருதுநகர்- 13,083, நாகப்பட்டினம்- 12,443, ஈரோடு- 12,333, திருப்பூர்- 11,928, சேலம்- 11,909, மதுரை- 11,699, கடலூர்- 11,615, திருவாரூர்- 11,508, வேலூர்- 11,155, நெல்லை- 11,132, தர்மபுரி- 10,604, விழுப்புரம்- 10,272, ராமநாதபுரம்- 9,592, திருச்சி- 9,549, தஞ்சாவூர்- 9,317, கிருஷ்ணகிரி- 9,206, கோவை- 9,132, கன்னியாகுமரி- 8,893, திருவள்ளூர்- 8,709, அரியலூர்- 8,537, கரூர்- 8,268, தூத்துக்குடி- 7,989, சிவகங்கை- 7,733, திருவண்ணாமலை- 7,329, காஞ்சிபுரம்- 6,349, சென்னை- 6,039, நாமக்கல்- 5,756, நீலகிரி- 4,768 என மொத்தம் 3,25,106 கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பசுமாடு மற்றும் எருமை மாடுகளுக்கு கன்று ஈனுதல் போன்ற சிக்கலான நிலையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மேலும் ‘1962’ எண் ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் காயமடைந்த காளைகளுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீடு மற்றும் பண்ணைகளில் உள்ள கால்நடைகள் நோய் குறைபாடு அல்லது எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளில் ‘1962’ ஆம்புலன்ஸ் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நடக்க முடியாத சூழலில் கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஏதுவாக ‘ஹைட்ராலிக் லிப்ட்’ வசதி உள்ளது. மின் வெளிச்சம் இல்லாத இடத்தில் இரவில் சிகிச்சைக்கு ஏதுவாக ஜெனரேட்டர், இன்வெர்டர், பெரிய மின் விளக்கு வசதிகள் உள்ளன. ‘108’ ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வரும் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் தான் இந்த ‘1962’ கால்நடை ஆம்புலன்ஸ் வசதியும் வழங்கி வருகிறது.

‘1962’ இலவச கால்நடை அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை வசதியை பிற மாவட்டங்களுக்கும் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்த வேண்டும். மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து நவீன வசதிகளுடன் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘1962’ இலவச கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை திட்ட செயலாக்க அலுவலர் பால்ராபின்சன் கூறும்போது, ‘‘கால்நடை வளர்ப்போர் ‘1962’ என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தால் மருத்துவ அவசர உதவி தேவைப்படும் கால்நடைகளுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவை மூலம் உரிய, உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்’’ என்றார்.

The post தமிழ்நாட்டில் ‘1962’ எண் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3.25 லட்சம் கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: