ராஜஸ்தானில் ஓடும் ரயிலில் இத்தாலி பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ஒரே டுவிட்டில் பயிற்சியாளர் அதிரடி கைது

ஜோத்பூர்: ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில், இத்தாலி பெண் பயணியிடம் பாலியல் சீண்டல் செய்த பயிற்சியாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், சமீபத்தில் இந்தியா வந்தார். அவர் ராணிகேத் எக்ஸ்பிரஸில் ஜெய்சால்மருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஏ-1 பெட்டியில் தனியாக அமர்ந்திருந்தார்.

அப்போது தவுலி ரேஞ்ச் பகுதியை சேர்ந்த பயிற்சியாளர் பங்காலி குப்தா (53) என்பவர், அந்த இத்தாலி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பயந்துபோன அவர், அவரது பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். பின்னர் கழிவறையில் இருந்து கொண்டே தனது இந்திய நண்பருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், பாதிக்கப்பட்ட இத்தாலி பெண்ணின் பிஎன்ஆர் உள்ளிட்ட விபரங்களுடன், ரயில்வே அமைச்சகத்திற்கு டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்தார்.

அந்த ரயில் பலோடியை வந்து அடைந்ததும், ஏ-1 பெட்டிக்குள் இருந்த பயிற்சியாளர் பங்காலி குப்தாவை, ஆர்.பி.எப் மற்றும் ஜி.ஆர்.பி போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கில் இத்தாலி பெண் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், பங்காலி குப்தாவுக்கு 6 மாதம் ரயில் பயண தடை விதித்து உத்தரவிட்டதாக ஜோத்பூர் ஜிஆர்பி இன்ஸ்பெக்டர் மகேஷ் ஸ்ரீமாலி கூறினார்.

The post ராஜஸ்தானில் ஓடும் ரயிலில் இத்தாலி பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ஒரே டுவிட்டில் பயிற்சியாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: