கொடநாடு காட்சி முனையில் மலை முகடுகளில் தவழும் மேகக்கூட்டங்களை காண குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

கோத்தகிரி, மார்ச் 20:  கொடநாடு காட்சி முனையில் நிலவும் குளு குளு கால நிலையையும், மலை முகடுகளில் தவழ்ந்தது செல்லும் மேகக்கூட்டங்களையும் கண்டு களித்து அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கொடநாடு காட்சி முனை விளங்குகிறது. இந்த காட்சி முனையில் கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இயற்கை அழகில் இங்கு அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளையும், அதன் நடுவில் உள்ள பழங்குடியினர் கிராமங்கள் மற்றும் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட  குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா  உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். வார விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்திருந்த நிலையில் கொடநாடு பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக குளுகுளு காலநிலை நிலவி வருகிறது.

இதனால் தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லை பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவில் உருவான அடர்ந்த வெண் படலம் சூழ்ந்த அடர்ந்த மேக மூட்டங்கள் மலைகளின் மீது தவழ்ந்து செல்வதை சுற்றுலா பயணிகள் மெய் மறந்து வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமல்லாமல் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘கொடநாடு காட்சி முனையில் பனிக்காலத்திற்கு பிறகு இதமான காலநிலையில் நிலவும் கடும் குளிருடன் அடர்ந்த மேகமூட்டங்களை மிக அருகில் கண்டு ரசிப்பது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக தெரிவித்தனர். இதையடுத்து, கொடநாடு காட்சி முனையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து சென்றனர்.

Related Stories: