ஊட்டி, மார்ச் 19: நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மழை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உட்பட பல்வேறு வகையான மழை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் கேரட் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாகவே நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளுக்கு விலை கூடுதலாக கிடைக்கும். அதுவும் உருளைக்கிழங்கிற்கு எப்போதுமே விலை அதிகமாக கிடைக்கும். சாதாரணமாக கடைகளில் கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்னர்.