மஞ்சூர் பஜாரில் காட்டு மாடு உலா

மஞ்சூர், மார்ச் 19:  மஞ்சூர் பஜாரில் காட்டு மாடு திடீரென நகர் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சூர் பகுதியில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அவ்வப்போது சிறுத்தைகளும் திடிர் விஜயம் செய்து பஜார் பகுதியில் கடைகளின் முன்பு படுத்து கொண்டிருக்கும் தெருநாய்களை கொன்று துாக்கி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை மேல்மஞ்சூர் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்துத்தும் மிகுதியாக காணப்பட்டது.

அப்போது கண்டிபிக்கை பகுதியில் இருந்து வந்த ராட்சத காட்டு மாடு ஒன்று நடுரோட்டில் ராஜநடைபோட துவங்கியது. திடீரென காட்டு மாடு எதிரே வருவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். அவ்வழியாக வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் எதிரே வந்த வாகனங்களை பொருட்படுத்தாத காட்டு மாடு சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்று கடைகள், குடியிருப்பு வழியாக சாலையோரத்தில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. நடுரோட்டில் நடந்து சென்ற காட்டு மாடை பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

Related Stories: