முத்துப்பேட்டை: திருவாருர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கற்பகநாதர்குளம் கிராமத்தில் அரசு அங்கன்வாடி குழந்தைகள் மையம் ஒன்று உள்ளது. இதில் அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். 1975ம் ஆண்டு பள்ளியாக துவங்கப்பட்டது. அதன்பின்னர் அங்கன்வாடி மையமாக மாறியது. இந்த பள்ளி அன்று முதல் மிக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 15ம்தேதி தாக்கிய கஜா புயலால் உருக்குலைந்தது. இதனால் அங்கன்வாடியை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இதனால் அப்பகுதி மரத்தடியில் பள்ளி இயங்கி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதிகாரிகள் இந்த கட்டிடத்தை சீரமைக்க வில்லை. மேலும் மழைக்கால நேரத்தில் பள்ளி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.