மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு மங்கையர்கரசியர் விருது, காரைக்கால் அம்மையார் விருது, இசைஞானியார் விருது மூன்று பெண்களுக்கு வழங்கினார். உலகத்தில் பல்வேறு நாடுகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். குறிப்பாக நமது நாட்டில் பல்வேறு துறையில் பெண்கள் சாதித்து உள்ளனர். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களாகிய நீங்கள் உங்களை வழிகாட்டியாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கையோடு இணைந்து செயல்படக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மயிலாடுதுறையை தூய்மையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இங்கு வந்தேன், மக்கள் ஆதரவுடன் இதனை செயல்படுத்தி வருகிறோம். மயிலாடுதுறை மாவட்டம் தூய்மையாக மாறுவதற்கு நீங்களும் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பெண்கள் எல்லா வகையிலும் மேம்பட்டு வருகின்றனர். ஆணும், பெண்ணும் சமம். பெண் சிசுக் கொலை குறைக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.