கோவை, பிப்.22: கோவை பீளமேடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலு (60). இவர் ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்று துபாயில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் பாலு கூறியதாவது: நான் 30 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளேன். என்னுடைய ஓய்வு காலங்களில் இந்த சமூகத்திற்கு யோகாவை கற்றுத்தர வேண்டும் என்பதே எனது ஆசை.
ஆகையால் கடந்த ஒரு வருடமாக யோகாவை கற்றுக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். இந்த ஒரு வருடத்தில் நான் 5 மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளேன். தற்போது கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 60 வயது பிரிவில் சாம்பியன் ஆப் சாம்பியன் சுற்றில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். இதனால் துபாயில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளேன். மேலும், கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்றுளேன். இவ்வாறு அவர் கூறினார்.