ஊட்டி,பிப்.21: ஊட்டி - குன்னூர் சாலையில் பல இடங்களிலும் சாலை விரிவாக்க பணி நடைபெற்றும் நிலையில் மண் மற்றும் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தை பிற சமவெளி பகுதி மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக ஊட்டி - குன்னூர் - மேட்டுபாளையம் சாலை உள்ளது. இச்சாலையில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஊட்டி - குன்னூர் இடையே வரை 14 கி.மீ., தூரத்திற்கு ரூ.27 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை குறுகலாக இருந்த இடங்கள்,விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து விரிவாக்கம் செய்து தடுப்புச்சுவர் அமைத்தல், மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் சாலையின் நடுவே பள்ளம் தோண்டி நிலத்தடி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.