புத்தக திருவிழா 2023ஐ முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறை ரூ.2.75 லட்சம் வழங்கின

ஊட்டி,பிப்.21:  நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகம் மற்றும் இலக்கிய திருவிழா 2023ஐ முன்னிட்டு ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊட்டி,குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் காசோலைகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சாலை,குடிநீர், வீட்டுமனை பட்டா என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து 83 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் பந்தலூர் வட்டம் புஞ்சவயல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காகவும், அருவங்காடு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர்,சர்வதேச அளவில் மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காகவும் என கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.6,840 மதிப்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் என மொத்தம் ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஊட்டியில் கடந்த 8ம் தேதி ரத்ததான முகாம் நடத்தப்பட்டதில் ரத்ததானம் செய்ததற்காக வழங்கப்பட்ட சான்றிதழ்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகம் மற்றும் இலக்கிய திருவிழா 2023ஐ முன்னிட்டு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சார்பில் ரூ.25 ஆயிரம், மாவட்ட ஊராட்சி தலைவர் சார்பில் ரூ.50 ஆயிரம், ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சார்பில் தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் 2.75 லட்சம் மதிப்பில் காசோலைகளை கலெக்டரிடம் வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஸ்ரீதர், மோகன குமராமங்கலம், ஜனார்த்தனன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: