ராமநாதபுரம், அக். 1: ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர். ஏப்.15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகு மீன்பிடி முறைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தொழிலுக்குச் செல்லும் படகுகள் தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய விதிகள் அமலாக்கம் தொடர்பாக மீன்வளத்துறையினர் நடுக்கடலில் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 15 ஆம் தேதிக்கு பின் தற்போது வரை டோக்கன் பெறாமலும் 109 விசைப்படகுகள்,
அனுமதியின்றி தொழிலுக்குச் சென்ற 7 விசைப்படகுகள், 5 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குள் மீன்பிடித்த 21 விசைப்படகுகள் சோதனையில் பிடிபட்டன. இப்படகு உரிமையாளர்களிடமிருந்து ரூ.4.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலம் நீங்கி கடலுக்குக் சென்று விதிகளை மீறி மேலும் 6 படகுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மீன்பிடி விதிகளை மீறும் படகுகள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடுக்கடலில் சோதனையின்போது விதிகளை மீறியதாக முதல் முறை பிடிபடும் படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், அடிக்கடி பிடிபடும் படகுகளுக்கு ரூ.15 ஆயிரம் என துவங்கி அப்படகில் கொண்டு வரப்படும் மீன்களின் எடைக்கேற்ப அபராதம் விதிக்கப்படுகிறது.