தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழாவில் இன்று தேர் பவனி

குளத்தூர்,செப்.29: தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழாவில் இன்று தேர் பவனி நடக்கிறது. குளத்தூரையடுத்த தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா கடந்த 20ம் தேதி மாலை தருவைகுளம் பங்குதந்தை லாசர், மரியஅரசு, வினித், வின்சென்ட் ஆகியோர் தலைமையில் திருப்பவனி, திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் தொடர்ந்து பத்து நாட்கள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர்வாதம், திருமுழுக்கு, நற்கருணைபவனி, பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி, ஜெபமாலை நடந்தது. நேற்று முன்தினம் மாலை புனிதமிக்கேல் அதிதூதரின் சப்பரப்பவனி முக்கிய வீதிகளில் நடந்தது. முன்னதாக  தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மறையுரை வழங்கினார். நேற்று காலை சிறுமலர் குருமட ஆன்மீக குரு சகாயஜோசப் தலைமையில் பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி மறையுரை வழங்கினார்.

மாலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் சூசைநசரேன் தலைமையில் புலியூர் பங்குதந்தை ஞானப்பிரகாசம், மணப்பாறை தீபக்சிங் முன்னிலையில் சிறப்பு மறையுரை, ஆராதனை நடந்தது திருப்பவனி, புதுநன்மை, உறுதி பூசுதல் பெறுவோர் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10ம் திருவிழாவான இன்று (29ம் தேதி) காலை சேசுராஜபுரம் பங்குதந்தை சந்தீஸ்டன் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட இருதயதோமாஸ் மறையுரை வழங்குகிறார். தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் புதுக்கோட்டை பங்குதந்தை லாரன்ஸ் மறையுரை வழங்குகிறார் இதையடுத்து பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியுடன் தேர்பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை காலை அசனவிருந்து நடைபெற உள்ளது என தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட் தெரிவித்தார்.

Related Stories: