வள்ளியூரில் கோலாகல திறப்பு விழா மரியா மகளிர் கல்லூரி பல்கலைக்கழகமாக வளரவேண்டும் சபாநாயகர் அப்பாவு பேச்சு

வள்ளியூர், செப்.29: வள்ளியூரில் புதிதாக துவங்கியுள்ள மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மிகப்பெரிய பல்கலைக்கழகமாக வளரவேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாழ்த்திப் பேசினார். வள்ளியூர் அருகே திருச்செந்தூர் சாலையில் டி.டி.என். குழுமம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா கோலாகலமாக நேற்று நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு தலைமை வகித்த  கல்லூரித் தாளாளரும்,  செயலாளருமான ஹெலன் லாரன்ஸ் வரவேற்றுப் பேசினார். வள்ளியூர் பாத்திமா திருத்தலத் தந்தை ஜான்சன் ஆசியுரை வழங்கினார்.  இதில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு புதிய கல்லூரி கட்டிடத்தை திறந்துவைத்துப் பேசுகையில் ‘‘பெண்கள் கல்வி கற்கும் நிலையை உருவாக்கி தந்தவர் தந்தை பெரியார். அவரது நோக்கத்தை பெண் கல்வியை நீதிக்கட்சி ஆட்சி வழியில் திராவிட மாடல் அரசு போற்றி பாதுகாத்து வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வரும் நமது முதல்வர் மு.க.் ஸ்டாலின்,  படிக்கும் மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கி வருகிறார். பச்சைத் தமிழன் என ெபரியாரால் அழைக்கப்பட்ட காமராஜர், கிராமங்கள் தோறும் பள்ளி துவங்கி பெண் குழந்தைகள் கல்வி கற்கச் செய்தவர்.

அவருக்கு பிறகு உயர் கல்விக்கு ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உயர்கல்விக்கு புதிய கட்டிடங்களைச் கட்டச் செய்த  முதல்வர், அதற்கு காமராஜர் பெயரை வைக்க உத்தரவிட்டுள்ளார். இது என் அரசு அல்ல; எனது அரசும் அல்ல.

நமது அரசு சமூகநீதிக்கான அரசு என சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அதைச் செயல்படுத்தி வரும் நமது முதல்வர், தகுதியான கல்லூரிகளுக்கு உடனடியாக அனுமதி அளித்து வருகிறார். தாமிரபரணி ஆற்றில் முன்னீர் பள்ளம் அருகேயிருந்து ராதாபுரம் தொகுதி முழுவதற்கும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் ரூ.271 கோடியை வாரி வழங்கியுள்ளார்.

இத்திட்டம் இன்னும் ஒன்றரை ஆண்டில் நிறைவேற்றப்படும். ரூ.3 கோடியில் விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கவும் ரூ.100 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விளையாட்டு பயிற்சி மையம் துவங்கு வதற்கான திட்டங்களையும் நமது முதல்வர் தந்துள்ளார். இக்கல்லூரி இப்பகுதியில் மிகப்பெரிய  பல்கலைக்கழகமாக வளர வேண்டும்’’ என்றார். முன்னதாக விழாவில் ஒலிவா குத்துவிளக்கேற்றினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளை, சென்னை டயனமிக்  இயக்குநர் வெல்லிங்டன், வள்ளியூர் யூனியன் சேர்மன் ராஜா ஞானதிரவியம், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், நேரு நர்ஸிங் கல்லூரி  முதல்வர் மார்க்கரெட்  ரஞ்சிதம், சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்  சுரேஸ் தங்கராஜ் தாம்சன், மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.ஆர்.கிளாடிஸ் லீமா ரோஸ், வார்டு உறுப்பினர் உஷா வாழ்த்திப் பேசினர்.

விழாவில் திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி, திமுக பிரதிநிதி நம்பி,  வணிகர் சங்கத்தலைவர் எட்வின் ஜோஸ், வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன், செயலாளர் ராஜ்குமார், வள்ளியூர் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இயற்கை எழிலுடன் கல்வி திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் நூலக கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில் ‘‘இயற்கை எழிலுடன் கல்வி கற்பிக்கும் வகையில் அமைந்துள்ள இக்கல்லூரி மாணவர்களுக்கு கற்கவேண்டும் என்ற எண்ணத்தை மேலும் மேலும் தூண்டும். வள்ளியூரிலும் டிடிஎன் ஸ்கூல் ஆப்  காமர்ஸ் ஆக  உருவாக வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு அதிக அளவில் தேவையாக உள்ள வணிகவியல், வணிக மேலாண்மை ஆகிய இரு படிப்புகளும் இங்கு அமைந்துள்ளது சிறப்புக்குரியது. இந்த கல்லூரி உயர் ஆராய்ச்சிகளையும் உருவாக்கும்  கல்லூரியாக மாறவேண்டும்’’ என்றார்.

Related Stories: