ஆசைக்கு இணங்க மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்தல்

நாகர்கோவில், செப்.28: குமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் பனச்சமூடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறேன். இந்த வீட்டின் கீழ் தளத்தில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஒருவரை கடந்த 8 மாதமாக எனக்கு தெரியும். நட்பு ரீதியில் அவருடன் பேசி வந்தேன்.இந்த நிலையில் அவர் தவறான கண்ணோட்டத்துடன் என்னை பலமுறை தொட முயற்சித்தார். நான் மறுப்பு தெரிவித்ததால் கடந்த 15ம் தேதி காலை 11 மணியளவில் என்னை தடுத்து நிறுத்தி எனது ஆடைகளை கிழித்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்ப முயன்ற போது என்னை இரும்பு கம்பியால் தாக்கினர். அவருடன் மேலும் 2 நபர்களும் சேர்ந்து என்னை துன்புறுத்தினர்.

இதில் காயம் அடைந்த நான் குழித்துறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். இது சம்பந்தமாக ஏற்கனவே அருமனை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.அந்த மனு இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்து வருகிறது. எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: