பட்டுக்கோட்டை, செப்.27: பட்டுக்கோட்டை அடுத்த தம்பிக்கோட்டை மேலக்காடு ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற திருமஞ்சன விழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த தம்பிக்கோட்டை மேலக்காடு ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருமஞ்சன விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருமஞ்சன விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அங்குள்ள சிவன் கோயிலிலிருந்து ஆஞ்சநேயர் வீதிஉலா நடந்தது. அப்போது பெண்கள் கணபதி ஹோமத்திற்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஜெயவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.