சத்தியமங்கலம், செப்.24: திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ராசாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து இந்து முன்னணியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் நடத்திய கடையடைப்பு போராட்டத்தின் போது கோட்டுவீராம்பாளையம் பகுதியில் திறக்கப்பட்டிருந்த பேக்கரியின் ஷோகேஸ் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பேக்கரியை அடித்து உடைத்து நொறுக்கிய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. எனவே உடனடியாக பேக்கரியை அடித்து உடைத்த முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.