தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது தண்டராம்பட்டு அருகே பயங்கரம் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்

தண்டராம்பட்டு, செப்.23: தண்டராம்பட்டு அருகே திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் அவரது தந்தையை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட குபேரபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சகாதேவன்(59). இவரது மனைவி அன்னக்கிளி(55). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் மணிகண்டன்(30), சக்திவேல்(28) என்ற 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில், கடைசி மகனான சக்திவேலுக்கு, அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஒரே மாதத்தில் பிரிந்த அவர்கள், பின்னர் விவாகரத்து செய்துள்ளனர்.

இதையடுத்து, அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சக்திவேல், தனக்கு வேறு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை சகாதேவனுக்கும், சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், நேற்றும் சக்திவேல் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு அவரது தந்தை சகாதேவன், தாய் அன்னக்கிளியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், திடீரென அருகில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சகாதேவனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் அன்னக்கிளி, அண்ணன் மணிகண்டன் ஆகியோர் தடுக்க முயன்றும் முடியவில்லை.

சக்திவேல் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த சகாதேவன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கண்ணெதிரே துடிதுடித்து இறந்ததை பார்த்து மனைவி அன்னக்கிளி, மகள் மணிகண்டன் கதறி அழுதனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று, அங்குள்ள விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த சக்திவேலை தானிப்பாடி போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், தந்தையை மகன் வெட்டிக்கொலை செய்துள்ள அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: