ஊட்டி, செப். 22: ஊட்டியில் இருந்து பட்பயர் செல்லும் சாலையில் ராட்சத மரங்கள் சாய்ந்து தொங்கிக் கொண்டிருப்பதால் விபத்து அபாயம் நீடிக்கிறது. ஊட்டியில் இருந்து தமிழகம் மாளிகை வழியாக பட்பயர் பகுதிக்கு செல்லும் சாலை ஒன்று உள்ளது. இச்சாலையின் இரு புறங்களிலும் ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பெரும்பாலான மரங்கள் சாலைகளில் குறுக்கே சாய்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.
தற்போது அடிக்கடி காற்று வீசி வரும் நிலையில், இந்த மரங்கள் விழும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த சாலையிலேயே சென்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பட்பயர் செல்லும் சாலையின் குறுக்கே தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களையும், சாலையோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள மரங்களையும் அகற்ற வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.