ஊட்டி பீட்ரூட் விலை உயர்ந்தது

 

ஊட்டி, ஏப்.24: ஊட்டியில் விளைவிக்கப்படும் பீட்ரூட்டிற்கு கிலோ ஒன்று ரூ.50 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் அறுவடையில் மும்முரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் மலைக்காய்கறிகளுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வரவேற்பு அதிகமாக உள்ளது.  இதனால், எப்போதும் நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மலைக்காய்கறிகளுக்கு மற்ற பகுதியில் விளையும் காய்கறிகளை காட்டிலும் விலை சற்று அதிகமாக கிடைக்கும். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து காணப்படுகிறது.

தற்போது ஊட்டியில் விளைவிக்கப்படும் பீட்ரூட்டிற்கு தரத்திற்கேற்ப கிலோ ஒன்று ரூ.40 முதல் 50 வரை கிடைக்கிறது. இதனால், பீட்ரூட் பயிரிட்டுள்ள வியாபாரிகள் அறுவடையில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஊட்டி அருகே உள்ள கப்பதொரை, முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா மற்றும் நஞ்சநாடு சுற்றுவட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட் அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பீட்ரூட் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

The post ஊட்டி பீட்ரூட் விலை உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: