தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்

 

ஊட்டி, ஏப். 21: மழை பெய்யாததால் மலர் செடிகளுக்கு நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஏப்ரல் மாதம் வரை மழை இருக்காது. ஏப்ரல் மாதம் சில தினங்கள் கோடை மழை கொட்டி தீர்க்கும்.

இதனால், மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவிற்கு நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.  ஆனால், இம்முறை இதுவரை ஊட்டியில் மழை பெய்யவில்லை. கடந்த வாரம் ஒரு சில தினங்கள் குன்னூர் மற்றும் மஞ்சூர் பகுதிகளில் மழை பெய்தது. ஆனால், ஊட்டியில் மட்டும் மழை பெய்யவில்லை. இதனால், மலர் செடிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனதால், தாவரவியல் பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மலர் கண்காட்சிக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில், தற்போது பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் மலர் செடிகள் மற்றும் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பூங்காவில் உள்ள குளங்களில் உள்ள தண்ணீரை கொண்டு மலர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மழை பெய்யவில்லை எனில், இந்த குளங்களிலும் தண்ணீர் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: