நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புதுகையில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை

புதுக்கோட்டை, ஜூன் 25: மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை நகரில் தமிழக அரசின் சார்பில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவுமணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் தலைவர் கலைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னரின் திருவுருவச் சிலையினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் திருச்சி மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவிதைப்பித்தன், பெரியண்ணன்அரசு, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத்அலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், விழாக்குழு செயலாளர் சம்பத்குமார், மன்னர் குடும்பத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: