கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடனில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

ஊட்டி, ஜூன் 9: மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, நில உடமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான வட்டாட்சியரின் அனுபோக சான்றிதழ் மற்றும் அடங்கல், பாஸ்போர்ட், அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது இருப்பிடம் அல்லது விவசாயம் பயிர் சாகுபடி செய்யும் நிலம் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் பெற்று பயனடையலாம். வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் கடன் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்த்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்பித்து பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.இதில் ஏதேனும் சேவை குறைபாடுகள் இருந்தால் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரை 73 38721401, உதவி பொது மேலாளர் 9486978433, கடன் மேலாளர் 9655591150 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Related Stories: