நாகர்கோவில், ஜூன் 6: சிறுபான்மை மாணவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: இது பெரியார் பூமி, திராவிட மாடல் ஆட்சிக்கு தலைமையேற்கின்ற பூமி. மற்ற மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கின்ற செயல்களை இங்கு சுட்டிக்காட்டி அதனை பெரிதாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழர்கள் ஒரு போதும் அதற்கு அனுமதி அளிக்கமாட்டார்கள். வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு அரணாக இருக்க மறைந்த தலைவர் கலைஞர் 2010ல் ஒரு துறை உருவாக்க அடித்தளம் தந்தார். அதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டார்கள். தமிழக முதல்வர் மீண்டும் அந்த துறையை உருவாக்கி வெளிநாடு வாழ்கின்ற தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தேவைகளை இன்று பூர்த்தி செய்து வருகிறார். உக்ரைனில் சிக்கி தவித்த மாணவர்களை மீட்டு வருவதில் தமிழகம் முனைப்பாக செயல்பட்டது. கடந்த ஓராண்டு காலத்திற்கு முன்பு வெளிநாட்டில் இறப்பவர்கள் சடலம் வருவதற்கு ஆண்டு கணக்கில் கூட ஆனது என்பதை பதிவேடுகள் காட்டுகின்றன. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அந்த எண்ணிக்கையை பார்த்தால் 6 மாதம், 3 மாதம் என்ற நிலையில் 10 நாட்களில் கூட மீட்டுக்கொண்டு வந்து கொடுத்துள்ளோம். இனி அந்த நிலையும் மாறிட தமிழக அரசு வெளிநாடு வாழ் நல வாரியத்தை அமைக்க உத்தரவு வழங்கியுள்ளார்கள். அந்த வாரியம் செயல்பட தொடங்கிய உடன் இந்த நிலை மாறிவிடும்.