திருவாரூர், மே 25: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக திராவிட கழகத்தின் இளைஞரணி, மாணவரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் அணி மாநில துணைத் தலைவர் உமாநாத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வம் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.