உளுந்தூர்பேட்டை, மே 14: வீடியோ பதிவிட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வரும் 25ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (32). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர் சவுந்தர்ராஜனுக்கு மணப்பெண் பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். வரும் 25ம் தேதி திருமணத்துக்கு தேதி குறிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது தந்தை ராஜேந்திரன் (59) கோவை வந்தார். தனது மகனுடன் சேர்ந்து அவரது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் சவுந்தர்ராஜனின் அண்ணன் சிவக்குமார் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், சவுந்ததர் ராஜன் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், சவுந்ததர்ராஜனின் நண்பர்களை தொடர்பு கொண்டு பீளமேடு டீச்சர்ஸ் காலனியில் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்து வர சொல்லியுள்ளார். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சவுந்தர்ராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.