விருத்தாசலம், பிப். 10:விருத்தாசலம், கடலூர் ரோட்டில் அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு பண்டகசாலை கழக சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இதில் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கடலூர், சிதம்பரம் ஆகிய 2 பாராளுமன்றத் தொகுதிகளுக்குப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19ம்தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்காக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) வீராங்கன் முன்னிலையில் நேற்று பணி மேற்கொள்ளப்பட்டது.