ஊட்டி,ஜன.22:திமுக., சார்பில் கூடலூர், நெல்லியாளம் நகராட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் திமுக., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் 19ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள் மற்றும் தேவர்சோலை, ஓவேலி, நடுவட்டம் ஆகிய பேரூராட்சிகளில் விருப்ப மனு வழங்கியவர்களிடம் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நேர்காணல் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பமனு அளித்த பலரும் இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.