நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தடங்கம் பகுதியில் அதியமான்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது, மிட்டநூலஅல்லி பகுதியைச்சேர்ந்த நரசிம்மன்(41), இவரது மகன் பிரபாகரன்(22) மற்றும் பிடமனேரி பகுதியைச் சேர்ந்த மனோஜ்(23) ஆகியோர் பெங்களூருவில் இருந்து குட்காவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, தர்மபுரியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தற்கு எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் அதியமான்கோட்டை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 900 கிலோ குட்கா, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.