மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்

தர்மபுரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்ட குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் பேசினார். மாவட்ட செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் மாதன், சிசுபாலன், அர்ச்சுணன், முத்து, நாகராஜன், கிரைஸா மேரி உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தேவையான மருந்துகள், கட்டமைப்பு வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி, மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மருத்துவ பணியாளர்களை நியமித்து, உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் விளைநிலத்திலும், குடியிருப்பு பகுதியிலும் நுழைந்து பயிர் சேதத்துடன், உயிர் சேதத்தையிம் ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க, வனத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும். வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்தும் வகையில், வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும். பொங்கல் பண்டிகையையொட்டி பால் உற்பத்தியாளர்களுக்கு, போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: