வீடு பாகப்பிரிவினை தகராறில் அம்மிக்கல்லால் தாக்கி தந்தை படுகொலை மகன் அதிரடி கைது கே.வி.குப்பம் அருகே பயங்கரம்

கே.வி.குப்பம், ஜன.11: கே.வி.குப்பம் அருகே வீடு பாகப்பிரிவினை தகராறில் தூங்கிய தந்தையை அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் பழைய அஞ்சல்நிலைய தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி(72), தொழிலாளி. இவரது மனைவி ஜெயா(62). மகன் லோகேஷ்(33) மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மெக்கானிக் வேலை செய்யும் லோகேஷ் அதே பகுதியில் கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 வயது மகள் உள்ளார். இவரது சகோதரிகள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் கோவிந்தசாமிக்கு சொந்தமான வீட்டை சகோதரிகளுடன் பாகம் பிரிப்பது தொடர்பாக லோகேசுக்கும், கோவிந்தசாமிக்கும் தகராறு இருந்து வந்ததாம். இதுதொடர்பாக, அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தந்தை, மகனுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்துள்ளனர். பின்னர், அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத லோகேஷ், இரவில் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த தந்தை கோவிந்தசாமியின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கோவிந்தசாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதைபார்த்ததும் லோகேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த ேலாகேஷை நேற்று மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாகப்பிரிவினை தகராறில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: