கழுகுமலை, ஜன 5: கழுகுமலையில் அரசு பள்ளி அருகே சாய்ந்த நிலையில் காணப்பட்ட மரத்தால் விபத்து அபாயம் நிலவிய நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக நெஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடனடியாக வெட்டி அகற்றினர். கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இதன் அருகே கோவில்பட்டி கோட்டம், நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட கோவில்பட்டி - சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் மிகவும் சாய்ந்தவாறு ஆபத்தான நிலையில் மரம் இருந்துவந்தது. இது பிரதான சாலை என்பதால் தூத்துக்குடியில் இருந்து அதிக அளவில் பாரம் ஏற்றிவரும் கனரக வாகனங்கள், சிமென்ட் லோடு லாரிகள், தீப்பெட்டி ஆலைகளில் இருந்து பண்டல்கள் ஏற்றி வரும் வாகனங்களும் ஆபத்தான இந்த மரத்தை உரசியபடியே சென்றதால் விபத்து அபாயம் நிலவியது. குறிப்பாக பள்ளி நேரத்தில் மரங்கள் திடீரென சாய்ந்தால் அறுந்துவிழும் மின்கம்பிகள் மூலம் மாணவர்களுக்கும் அசம்பாவிதம் ஏற்படும் சூழலும் உருவானது. இதனால் அச்சத்திற்கு உள்ளான பெற்றோர் உள்ளிட்டோர், இதுவிஷயத்தில் நெடுஞ்சாலைத்துறை தனிக்கவனம் செலுத்தி ஆபத்தான நிலையில் உள்ள இந்த மரத்தை விரைவில் மாற்றி அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த நெஞ்சாலைத்துறை பணியாளர்கள், அபாய நிலையில் இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால், பொதுமக்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்தனர்.