மன்னார்குடி, ஜன. 4: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநாகை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (49). இவருக்கு ரமணி (44)என்ற மனைவியும், சர்வேஷ் (11), ஹரிஷ் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர். ராமச்சந்திரன் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரமணி தனது மகன்களுடன் தஞ்சை மாவட்டம் கண்டியூரில் உள்ள தனது தாயார் வீட்டில் கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்து விட்டு நேற்று காலை கீழநாகை கிராமத்திற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.அங்கு மேஜை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சாவி மூலம் அங்கிருந்த பீரோவை மர்ம நபர்கள் திறந்து உள்ளே இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ 5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.