குடியாத்தம், டிச.30: பேரணாம்பட்டு தலைக்காட்டில் நில அதிர்வு ஏற்பட்ட இடத்தில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கடந்த மாதம் தொடர்ந்து 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் ஒரு வீட்டில் விரிசல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதிமக்கள் பீதி அடைந்துள்ளனர். பின்னர், பேரணாம்பட்டு அடுத்த டி.டி.மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கர சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதில், 5க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைக்காடு பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருவாய் துறையினர் உணவு அளித்து வருகின்றனர்.