கூடலூர்: ஆந்திர மாநிலத்தில் உள்ள அகில பாரத ஐயப்ப சேவா பிரசார சங்கத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40), ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி. தங்கநகை வேலை செய்கிறார். இவர், நாட்டில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என ஊன்றுகோல் உதவியுடன் ஆந்திராவிலிருந்து கால்நடையாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். கடந்த செப்.21ம் தேதி இருமுடியுடன் சொந்த ஊரிலிருந்து கால்நடையாக தன் பயணத்தை துவக்கிய இவர், நேற்று 72வது நாளில் கம்பம் வந்தார். கம்பம் கூடலூர் எல்லைப்பகுதியில், தேனி மாவட்ட ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்த குருசாமி கதிரேசன் தலைமையில் அவருக்கு வரவேற்பு கொடுத்து, துணைக்கு ஒரு ஐயப்ப பக்தருடன் அவரை கோயிலுக்கு வழியனுப்பி வைத்தனர்.