தூத்துக்குடியில் சிதைந்த நிலையில் எலும்புக்கூடாக கரை ஒதுங்கிய பெண் உடல் போலீசார் விசாரணை

தூத்துக்குடி, டிச. 6: தூத்துக்குடியில் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கிய எலும்புக்கூடான பெண் உடலை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி சிந்தாயாத்திரை மாதா கோவில் கடற்கரை பகுதியில் நேற்று காலை யாரென்று அடையாளம் காணமுடியாத அளவிற்கு அழுகிய  நிலையில் உடல்  கரை ஒதுங்கி காணப்பட்டது. தலை எலும்புக்கூடாகவும், உடல் பகுதி தவிர அனைத்தும் எலும்பாகவும் மீன்கள் தின்று, கால்கள் இல்லாத நிலையில் காணப்பட்டது. இந்த நபர்  கடலில் தவறி விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தகவலறிந்த டவுன் விஏஓ பராசக்தி மரைன் போலீசில் புகார் அளித்தார்.  இதையடுத்து அங்கு சென்ற மரைன் போலீசார், எலும்புக்கூடான உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். பிரதே பரிசோதனைக்கு பின் அது பெண் உடல் என தெரியவந்தது. மேலும் அந்த பெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.  தூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதி பெற்று மாநகராட்சிக்கு உட்பட்ட மையவாடிபகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிந்த மரைன் போலீசார் இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: