நாகை,டிச.5: நகர்புற வாழ்விட திட்டத்தின் கீழ் வீடுகள் பெற நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடலூர் கோட்டம் மூலம் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் நாகை மாவட்டம் சம்பாதோட்டத்தில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளுக்கு நீர்நிலை மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்களை மறு குடியமர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். நகர்புற வீடற்ற ஏழைகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வீடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு தொகை போக மீதம் உள்ள ரூ.1.20 லட்சத்தை பயனாளிகள் பங்குத்தொகையாக வழங்க வேண்டும்.