புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக்கோரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்

வாழப்பாடி, டிச.5: வாழப்பாடி அருகே மழைக்கு ஒழுகும் கட்டிடத்திற்கு பதில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக்கோரி, அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட தும்பல் ஊராட்சி மாமாஞ்சி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 165 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழை பெய்யும்போது வகுப்பறைக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரியும், தலைமை ஆசிரியரை மாற்றக்கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நேற்று காலை வாழப்பாடி-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் மாமாஞ்சி பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி முத்துசாமி, ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மழைக்கு ஒழுகும் கட்டிடத்தை ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: