ஊட்டி, டிச. 5: ஊட்டி அருகேயுள்ள அழகர் மலை கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமம் செங்குத்தான மலை மீது அமைந்துள்ளது.மழைக்காலங்களில் தற்போது உள்ள நடைபாதைகள் இடிந்து விழும் நிலையில், குடியிருப்புக்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இங்கு தெரு விளக்குகளும் எரியாத நிலையில், இரவு நேரங்களில் இந்த கிராத்திற்கு செல்லும் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இந்த கிராமத்திற்கு சிமென்ட் சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் உள்ளாட்சி அமைப்பிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பல முறை மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பள்ளிச் செல்லும் மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் தற்போது கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிமென்ட் நடைபாதை, தெரு விளக்கு வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.