ஊட்டி, டிச. 4: இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் 122 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக முதற்கட்டமாக 2249 தன்னார்வலர்கள் பதிவு மேற்கொண்டனர். பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களில் திறனறித் தேர்வு மற்றும் குழு விவாதத்தின் மூலம் 122 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரு நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி 117 மையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளை குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வி என்கிற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திட திட்டமிடப்பட்டள்ளது.