நெல்லை, ஏப். 23: நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 772 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தொடர்ந்து உச்சமடைந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த ஓராண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் அதிகபட்சமாக 489 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் மட்டும் மேலும் 2125 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின்படி 424 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இதுதவிர தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 99 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. நெல்லை, சாந்திநகர் காவலர் குடியிருப்பில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.நேற்ைறய பாதிப்பில் கூடங்குளம், வடக்கன்குளம், செட்டிகுளம் பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகர பகுதியை பொறுத்தவரை 4 மண்டலங்களிலும் கொரோனா பரவி உள்ளது. மாநகரில் மட்டும் 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டோனாவூரில் பிளஸ் 2 மாணவிகள் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுகாதார மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.