ஊட்டி, ஏப். 14: ஆண்டு தோறும் கோடை சீசனின் போது ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது போன்று இங்கு வரும் சுற்றலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, முதுமலை புலிகள் காப்பகம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.இது போன்று ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வசிக்காக கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் மூலம் சர்க்கீயூட் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சர்க்கியூட் பஸ்களில் பெரியவர்களுக்கு ரூ.100ம் சிறியவர்களுக்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ்களில் செல்பவர்களுக்கு டிக்கெட்டிற்கு பதிலாக ‘பாஸ்’ வழங்கப்படும். இந்த பாஸ் வைத்துள்ள பயணிகள் சர்க்கீயூட் பஸ்களில் பாசில் குறிப்பிட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லாம். அதேபோல், ஒரே பஸ்சில் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு சுற்றுலா தலத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது, மீண்டும் அவ்வழியாக வரும் சர்க்கியூட் பஸ்சில் ஏறி அடுத்த சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா சந்திப்பு, படகு இல்லம், மரவியல் பூங்கா, சிறுவர் பூங்கா மற்றும் தொட்டபெட்டா சிகரம் ஆகிய பகுதிகளுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி துவங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை இயக்கப்படும்.