பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூர்,ஏப்.13: பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு பின்புறம் வெங்கடேசபுரத்தில் வசித்து வருபவர் முரளி (30). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி(26). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக மல்லிகா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

தற்போது மகேஸ்வரிக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை கடந்த 25 நாட்களுக்கு முன் பிறந்துள்ளது. இதற்காக மகேஸ்வரி தனது தாய் வீடான அனைப்பாடி கிராமத்திற்கு சென்று தங்கியுள்ளார். இதனை தொடர்ந்து முரளியும் கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கட்சி பணிகளுக்காக ஊட்டிக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பது கண்டு பக்கத்து வீட்டார் முரளி மற்றும் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருவரும் வெளியூர் சென்ற நேரம் பார்த்து கடந்த சில தினங்களில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று 5 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டர் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் நகை ஸ்கூட்டியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பெரம்பலூர் நகரில் தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் நகர பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: